ஸ்ரீபெரும்புதூர் அருகே உணவு விடுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்.
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் உணவு விடுதியில், பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரு துப்புரவு தொழிலாளர்கள் முருகேசன், மாரி மற்றும் உணவு விடுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் ரவி, விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மேலும் இருவர், மயக்கமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர் தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது அவர், துப்புரவு பணியில் ஈடுபடும் போது உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், கடந்த 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இது தொடர்பான சட்டத்தை முழுமையாக அமல்படுத்த உத்தரவிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மறு வாழ்வு மற்றும் இழப்பீடு தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி, இதுதொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சட்டத்தையும் அரசு அமல்படுத்தி வரும் நிலையில், விழிப்புணர்வு கொடுத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது வேதனை தருவதாக தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் உணவு விடுதியில், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு, அந்நிறுவனம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இது தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு தொடரப்பட்ட நிலுவையில் இருக்கும் வழக்கை, அடுத்த வாரம் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு அனுமதித்தது.