மருத்துவர்கள், மருத்துவம் படித்த போது வெற்றி பெற எத்தனை முறை தேர்வு எழுதினர் என்ற விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஸ்ரீசக்தீஷ் என்ற மாணவர், சமூக மருத்துவ தேர்வில் தோல்வியடைந்ததால், அடுத்த ஆண்டு அத்தேர்வை எழுதினார். இந்த தேர்வு முடிவுகளில் இரண்டாவது முறையாக எழுதிய உள்மதிப்பீட்டு மதிப்பெண்ணை சேர்க்கவில்லை எனக் கூறி, அந்த மதிப்பெண்களை சேர்க்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், உள்மதிப்பீட்டு தேர்வை பொறுத்தவரை முதலில் எழுதிய தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற பல்கலைக்கழக விதியை ஏற்று, மாணவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவர், மருத்துவம் படித்த போது, எத்தனை முறை தேர்வு எழுதினார் என்ற விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைத்தார்.