போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ‘எங்கள் பாட்டி சந்தியா, போயஸ் தோட்டத்தி்ல் உள்ள வேதாநிலையம் இல்லம் உள்ளிட்ட பல சொத்துக்களை வாங்கியுள்ளார். அந்த வீட்டில் அத்தை ஜெயலலிதா, எனது தந்தை ஜெயகுமார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தோம். பின் எனது தந்தை தி.நகருக்கு குடி பெயர்ந்தார்.
தற்போது அத்தை ஜெயலலிதா மறைந்து விட்டார். அவர் எந்த உயிலும் இதுவரை எழுதி வைக்கவில்லை. அந்த சொத்துக்களுக்கு நானும், எனது சகோதரர் தீபக்கும் தான் சட்டப்பூர்வ வாரிசு. ஆனால் தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மேலும், முதல்வரின் அறிவிப்பின் அடிப்படையில், வருவாய்த் துறை அதிகாரிகள் போயஸ் தோட்ட இல்லத்தை அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அவரது அறிவிப்பின் அடிப்படையில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும். இதுசம்பந்தமாக தான் அளித்த மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தனியார் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எந்த விதியும் இல்லை. அரசு தவறாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ என தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் தேவை’ என தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்டோர் வரும் 23 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை (அக்டோபர் 23) அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.