கொரோனா ஊரடங்கு எதிரொலி: அனைத்து நீதிமன்ற பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் காரணமாக நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைப்பது என உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளதாக தலைமைப் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், மறு உத்தரவு வரும் வரை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை எனவும் அதி முக்கியத்துவம் வாய்ந்த, அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நீதிபதி அனுமதி பெற்று தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதன்பின், அந்த வழக்கின் விசாரணை நடைபெறும் இடம், நேரடி விசாரணையா/ காணொளி காட்சி மூலம் விசாரணையா என பின்னர் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக அல்லது நீதிமன்ற அலுவல் தொடர்பாக சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதியோடு, மிக அவசர வழக்காக இருந்தால் மட்டுமே கீழமை நீதிமன்றங்கள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனவும்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"