கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க அதிமுகவிற்கும், அதன் அணிகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அண்ணா எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கட்சியின் அவைத்தலைவர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு துவங்கப்பட்ட தங்கள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், கட்சிக்கு கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் இரு ஓரங்களில் அண்ணா எம்ஜிஆர் படங்களுடன் கொடியை வடிவமைத்து அதை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கும், டிரேடு மார்க் பதிவாளருக்கும் விண்ணபித்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
மேலும், அதிமுகவின் கொடி கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் வெள்ளை நிறத்தில் அண்ணா படம் பொறிக்கப்பட்டுள்ளது. அதிமுக விதிகளின் படி அந்த கட்சியின் கொடி கருப்பு, வெள்ளை, சிவப்பு அல்ல. எனவே தங்கள் கட்சி கொடியை பயன்படுத்த அதிமுகவிற்கும், அதன் அனைத்து அணிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி, மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க அதிமுகவுக்கும், அதன் அணிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.