தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 (2016-ஆம் ஆண்டு) ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதலே அதில் சர்ச்சைகள் நிலவின. தொடர்ந்து, அதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்-26 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பில், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது பஞ்சாயத்து ராஜ் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய கோரி திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, பாடம் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் (2016-ஆம் ஆண்டு) உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விபரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில பரிந்துரைகளையும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம், "வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.