முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து 7 பேரை முன்விடுதலை வழங்க வேண்டுமென கோரி, நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி, கடந்த பிப்ரவரியில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டி விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக மனுதரார் கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது.
அதே போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும்,ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும், 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும், வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 20 ஆம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஏழு பேரை முன் விடுதலை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.