நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "காப்பான் " இந்த படத்திற்கு தடை கோரி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் கதைகளை எழுதி வருவதாகவும், கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியதாகவும், கதையின் படி பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீதர் இணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார்.இந்த கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். அவர் கதையை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இந்த நிலையில், என்னுடைய சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அதில் நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீட்டு குறித்தும், விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளிக்கிறார். என்னுடைய கதையை தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த காப்பான் படத்தை இம்மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். எனவே, காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி முன் இன்று விசாரணைக்கு வந்தது. பட நிறுவனம் தரப்பில் இடைக்கால தடை விதிக்க கூடாது என்று வாதிட்டனர். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.