Advertisment

இ.பி.எஸ் தேர்வு செல்லாது; ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்; அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது; ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும்; அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

author-image
WebDesk
New Update
AIADMK, AIADMK general council meeting case, ops vs eps, o panneerselvam, edappadi palaniswami, அதிமுக பொதுக்குழு வழக்கு, அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு, சென்னை உயர் நீதிமன்றம், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, chennai high court, AIADMK general committee case today judgement

Chennai High Court verdicts on ADMK general council meeting case: ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லாது, ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை கோரிக்கையால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிந்தது. அந்த பொதுக்குழுவில், ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்றும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார் என்றும் இ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 12 கிராம மக்கள் எதிர்ப்பு; கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

இந்த பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்தலாம். அதேநேரம் விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டார்.

அதேநேரம், அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. எனவே பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற ஓ.பி.எஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்த வழக்கில் இருந்து விலகினார்.

பின்னர், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. இரண்டு நாட்களாக நடந்த இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அதேநேரம் ஓ.பன்னீர் செல்வம் அவரது வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் எடப்பாடி தரப்பில் அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினர்.

இந்தநிலையில் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்தார்.

அதில், அ.தி.மு.க.,வில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment