சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 மதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் மே மாதம் 5ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை திருமழிசைக்கு மாற்றியது. கடந்த 2 மாதங்களாக காய்கறி கடைகள் திருமழிசையில்தான் செயல்பட்டு வருகின்றன. திருமழிசையில் தற்போது 200 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
திருமழிசையில் காய்கறி மார்க்கெட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் ஒரு நாள் மழைக்கே மிகவும் மோசமாகி விடுகிறது. தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால், மேலும் நிலைமை மோசமாகும் என்பதால் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் துணை முதல்வரை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வரை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரிக்கை வைத்த கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், “கோயம்பேடு வியாபாரிகள் சங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்று முதல்வரை சந்தித்து கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முதல்வர் எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட பிறகு, மார்க்கெட்டை திறப்பது குறித்து வியாபாரிகள் சுகாதார அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைத்து விவாதித்து அதன் பிறகு திறக்கப்படும் என்று கூறினார். மழை வந்தால் திருமழிசையில் வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கூறினோம். காய்கறி ஏற்றிவரும் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்வதைப் பற்றி கூறினோம். எங்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்” என்று கூறினார்.
திருமழிசையில் எந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கிறது என்று கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறுகையில், “திருமழிசை பகுதி ஒரு களிமண் நிறைந்த பகுதி. மழைவந்தால் அங்கே காய்கறி ஏற்றிவரும் லாரிகளால் சேறாகி லாரிகள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. காய்கறிகள் அழுகிப்போகின்றன. இதனால், வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.
அதனால், கோயம்பேடு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க கோயம்பேடு மார்க்கெட்டை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விரைவாக திறக்க வேண்டும். வியாபாரிகள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்று” என்று கூறினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோயம்பேடு மார்க்கெட்டை சரியாக எப்போது திறக்கப்படும் என்பதைப் பற்றி ஏதாவது கூறினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜசேகர், “துணை முதல்வர் கோயம்பேடு மார்க்கெட் திறப்பது குறித்து இன்னும் ஓரிரண்டு நாட்களில் குழு அமைத்து விவாதித்து முடிவு எடுப்பதாகக் கூறினார்” என்று தெரிவித்தார்.
கொரொனாவால், சென்னையின் கோயம்பேடு மார்க்கெட் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் சங்கத்தினர் துணை முதல்வரை சந்தித்து மார்க்கெட்டை திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். துணை முதல்வர் மார்க்கெட் திறப்பது குறித்து உறுதி அளித்திருப்பதாக தெரிவிக்கின்றனர். அதனால், வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.