தமிழக அரசு ஏப்ரல் 26 முதல் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அறித்ததைத் தொடர்ந்து, சென்னை உள்பட பல இடங்களில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளில் கூட்டமாக குவிந்ததால் ஊரடங்கு என்பது கேலிக்கூதாக மாறிக் காணப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியே வரலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு, கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப்ரல் 26-ம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி இரவு 9 மணி வரை சென்னை கோவை, மதுரை ஆகிய 3 மாநகரங்களில் முழு ஊரடங்கை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26, காலை 6 மணி முதல் ஏப்ரல் 28-ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு இருந்தாலும், தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (ஆவின்), உணவு விநியோக குழுக்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு போதுமான அளவு பால் வழங்குவதை உறுதி செய்து நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகக் கூறியது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று காலை 7 மணி முதல் பால் பாக்கெட்டுகள் தம்பரம், பல்லாவரம் பகுதிகளில் விற்கப்பட்டன. மேலும், பல கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குவந்ததால் நெரிசலாக காணப்பட்டது.
முழு ஊரடங்கு அறிவிப்பு காரணமாக சென்னையில், சானடோரியம்-தாம்பரம் பாலத்திற்கு இடையில் தடுப்புகள் வைக்கப்பட்டு மக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு செல்வதை அனுமதிக்காமல் போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டது. முழு ஊரடங்கின்போது வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதைத் தடுக்க போலீசார் சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய சாலைகளையும் நகரின் பல உள் சாலைகளை வெள்ளிக்கிழமை மூடிவிட்டனர்.
ஏற்கெனவே நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது என்று அச்சப்பட்ட பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதற்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கடைபிடிக்கப்பட்டு வந்த சமூக விலகல் கேலிக் கூத்தானது. சென்னையில் அதிக பட்சமாக 133 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள ராயபுரம் பகுதியில் மளிகைப் பொருட்களை வாங்க மக்கள் மளிகைக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்ற சம்பவம் கவலையை ஏற்படுத்தியது.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளில் கூட்டமாக குவிந்து வருவதை அறிந்த தமிழக அரசு, சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகராட்சிகளிலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 3 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் மற்றும் பிற கடைகளும் திறந்திருக்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை 1,755 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, கோவை மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சி மற்றும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சமூக விலகலை கடைபிடிக்காமல் கடைகளிலும் மார்க்கெட்களிலும் பொதுமக்கள் கூட்டமாக குவிந்ததால் ஊரடங்கு என்பதே கேலிக்கூத்தாகி காணப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.