சென்னையில் செயல்படும் லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பணி செய்துவந்த 20 ஊழியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டலுக்குப் பிறகு லீலா பேலஸ் சென்னையின் இரண்டாவது கோவிட் -19 ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் தங்களது அனைத்து திட்டமிட்ட நிகழ்வுகளையும் ஒத்திவைக்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் மட்டும், நட்சத்திர மதிப்பீட்டு விடுதி ஊழியர்கள் 114 பேர் உட்பட மொத்தம் 125 விடுதி பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகர விடுதிகளில் பணிபுரியும் 4,392 ஊழியர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 491 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று, சென்னை ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டல் ஊழியர்கள் உட்பட 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினர்.
சென்னை மாநகராட்சியின் அறிக்கையின்படி, சென்னையில் நட்சத்திர மதிப்பீடு வழங்கப்படாத ஹோட்டல்களில் பணிபுரியும் 2,769 ஊழியர்களில் 11 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 236 பேருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் கோவிட்- 19 தோற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,26,234 ஆக அதிகைர்துள்ளது. மேலும், சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,406 ஆகும்.