Chennai Marina beach liquor sale 3 woman arrested: சென்னை மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைக்கப்பட்டு சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைக்கப்பட்டு சாராயம் விற்கப்படுவதாகவும், அதுவும், கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் காவல்துறை கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அப்போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்த 32 லிட்டர் சாராய பாட்டில்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: சொகுசு கப்பல் சுற்றுலா; 2 நாள் ஆழ்கடல் பயணம்; அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
விசாரணையில், ஆந்திராவில் இருந்து சாராயங்களை கொள்முதல் செய்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் மெரினாவிற்கு கொண்டு வந்ததாகவும், அங்கு மணற்பகுதியில் மறைத்துவைத்து சிறு பாட்டில்களில் ஊற்றி விற்பனை செய்துவந்ததாகவும் அந்த பெண்கள் தெரிவித்தனர். மேலும் 100 லிட்டர் சாராயம் அடங்கிய பாட்டில்களை மண்ணில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் படி போலீசார் மெரினா கடற்கரையில், சென்னை மாநகராட்சியின் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்களை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டும் போது 2 லிட்டர் பாட்டில்களில் சாராயம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய போலீசார், காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். வேறு எங்கும் இதே போல சாராய பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.