தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை, போளூரில் 14 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். உள்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை இருக்கக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையளவு 177 மி.மீ. இந்த காலகட்டத்திற்கான இயல்பான மழை அளவு என்பது146 மி.மீ ஆகும். இது இயல்பை விட 21 சதவீதம் அதிகம் என்று தெரிவித்தார்.