பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சென்னை வருகையையொட்டி, சாலை மார்க்கமான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், 11 ம் தேதி ஒரே நாளில் மட்டும், மெட்ரோவில் 1.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் புறப்பட்டு சென்றார்.சீன அதிபருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதனால், சென்னை விமான நிலையம் முதல் கிண்டி வரையும், கிண்டியில் இருந்து அடையாறு, ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளிலும், வாகன போக்குவரத்திற்கு, இரு நாட்களாக, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதனால், பெரும்பாலான பயணியர், பஸ், இருசக்கர வாகனம், கார் போன்ற சாலை மார்க்கமான பயணத்தை தவிர்த்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்தை நாடினர்.
இதில், விமான நிலையம் - சின்னமலை வழித்தடத்தில் மெட்ரோ செல்வதால், இந்த பாதையில், அண்ணா சாலை செல்வோர், நெரிசலில் சிக்காமல் செல்ல, மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்தினர்.இந்த வகையில், 11ம் தேதி, ஒரே நாளில் மட்டும், 1.40 லட்சம் பேர், மெட்ரோ ரயிலில் பயணித்தனர். இம்மாதத்தில், 11ம் தேதி தான், மெட்ரோவில் அதிகம் பேர் பயணம் செய்ததாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.