சென்னையின் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வழித்தடத்தில் விரைவில் துவங்க உள்ள மெட்ரோ ரயில் சேவையில், புதிய மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் போக்குவரத்துக்கு உற்ற முறையாக சென்னை மெட்ரோ ரயில் சேவை விளங்கிவருவதை யாரும் மறுக்க முடியாது. அந்தளவிற்கு, சென்னை மெட்ரோ ரயில், மக்களின் வாழ்க்கைமுறையில் நீங்காத இடம்பிடித்துள்ளது. நாள் ஒன்றிற்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 45 கி.மீ தொலைவிலான முதல்நிலை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கடந்த 2019ம் ஆண்டின் பிப்ரவரி முதல் முழுமையாக செயல்பட்டு வருகிறது. முதல்நிலை பணிகளின் விரிவாக்க திட்டத்தின் கீழ், தற்போது வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான 9.051 கி.மீ தொலைவிலான பணிகள் ரூ.3770 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், 2020 ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்குவதற்காக, ரூ.200 கோடி மதிப்பீட்டில், 10 புதிய மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய ரயில்கள், ஆந்திரமாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் உள்ள ஆல்ஸ்டோம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் இந்த புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ரயில் பெட்டிகள் பல்வேறு சோதனைகளை கடந்தே உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய ரயில் பெட்டிகள், குறைந்த , மிதவேகம் மற்றும் அதிகவேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.