சென்னை சென்ட்ரல், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் அமலில் உள்ள பீடர் கேப் சர்வீஸ், தற்போது நங்கநல்லூர் மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ ஸ்டேசன்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இனி நங்கநல்லூர் மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் ஸ்டேசன்களிலிருந்து வெளியே வருபவர்கள், உடனடியாக காத்திருக்கும் பீடர் கேப் வாகனத்தில், குறைந்த செலவில், போக வேண்டிய இடத்திற்கு உடனடியாக சென்றுவிடலாம்.
அதிகபட்சம் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு செல்லும் வகையிலான இந்த சீருந்துவின் கட்டணம் ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் மொபைல் ஆப் மூலம், இந்த சீருந்து வாகனத்தை புக்கிங் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், பெங்களூருவின் மெகா கேப்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், முதற்கட்டமாக நந்தனம், ஏஜி - டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, கவர்ன்மெண்ட் எஸ்டேட் மற்றும் சென்னை சென்ட்ரல் ஸ்டேசன்களில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பீடர் கேப் சேவையை துவக்கியது. பின் விமானநிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை ஸ்டேசன்களுக்கு இந்த சேவை, கடந்த 20ம் தேதி விரிவுபடுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (25ம் தேதி) இந்த பீடர் கேப் சேவை, நங்கநல்லூர் மற்றும் ஷெனாய் நகர் ஸ்டேசன்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இந்த சேவை சைதாப்பேட்டை, நேரு பார்க், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் டவர் மற்றும் அரும்பாக்கம் ஸ்டேசன்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.