சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த 8 நிரந்தர பணியாளர்கள், விதிகளுக்கு புறம்பாக சங்கம் ஆரம்பித்ததாக சொல்லி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து நேற்று மதியம் முதல் மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் பணியை புறக்கணித்து ஊழியர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நிரந்தர ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்த அனுபவம் உள்ள தற்காலிக ஊழியர்கள் மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், மதியம் 1.30 மணி முதல் இவ்வழித்தடத்தில் அனைத்து மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொழிற்சங்க பிரதிநிதிளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. இன்று மாலை வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யூ. தமிழ் மாநிலக்குழு தலைவர் அ.சவுந்தரராஜன், "மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். 8 ஊழியர்கள் மீதான பணி நீக்கத்தை திரும்பப் பெற மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் மெட்ரோ நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.