சென்னையில் மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் மீட்டர் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை டிஜிட்டல் மீட்டர் என்ற வடிவிலான முறை அமலுக்கு வருகிறது.
சென்னையில் மெட்ரோ வாட்டரின் பயன்பாட்டு அளவை கணக்கிடும் பொருட்டு மீட்டர் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமலில் இருந்தது. தரமில்லாத மீட்டர், நீர் விநியோகத்தின் ஏற்றத்தாழ்வால், அடிக்கடி பழுதானது. இதன்காரணமாக, பயனாளர்கள் மட்டுமல்லாது குடிநீர் வாரிய ஊழியர்களும் சொல்லமுடியாத துயரங்களுக்கு உள்ளாயினர். அதன்பின்னர், மீட்டர் திட்டமே அடியோடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் அடிப்படையில், மெட்ரோ வாட்டர் பயன்பாட்டின் அளவை கணக்கிடும் வகையில், டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அடையார் பகுதியில் உள்ள குடியிருப்பு, அபார்ட்மென்ட், மென்பொருள் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பொருத்தப்பட்டு வருகிறது.
முன்பு இருந்த குறைகளை இதில் களையும் வண்ணம், புதிய தொழில்நுட்ப அடிப்படையில், மீட்டர் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டு நிறுவனம், இந்த டிஜிட்டல் மீட்டர்களை தயாரித்துள்ளது. இந்த மீ்ட்டர்கள், கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள நிறுவனத்தில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வெற்றி பெற்றபின்னரே, சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக 500 மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள், சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இந்த டிஜிட்டல் மீட்டரை பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது