Chennai news Crematoriums under watch : சென்னை பெருநகர மாநகராட்சி, நகரில் உள்ள மயானங்கள் குறித்து நிகழ்நேர கண்காணிப்பை துவங்கியுள்ளது. கொரோனாவால் சென்னையின் பல்வேறு பகுதியில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை கையாளுவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மயானங்களில் முறைக்கேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகார்களை அடுத்து ரியல் டைம் மானிட்டரிங்கிற்கு உத்தரவிட்டு, இதுவரை வந்த புகார்களுக்கு தீர்வுகள் காண மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
Advertisment
உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினரிடம் தகனத்திற்கு அதிகப்படியான கட்டணம் வாங்கும் மயானங்களை மேற்பார்வையிட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ரிப்பன் கட்டிடங்களில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாளர்களால் இந்த மேற்பார்வை நடத்தப்பட்டு வருகிறது.
ரிப்பன் மாளிகையில் செயல்படும் இந்த அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. மயானங்களில் நடைபெறும் நிர்வாக முறைகேடு குறித்து புகாரளிக்க பொதுமக்கள் 044-25384520 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
அதே போன்று வாட்ஸ்ஆப்பில் 9498346900 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். இறந்தவர்களை தகனம் செய்ய எடுத்து செல்ல வாகனம் வேண்டும் நபர்கள் 155377 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். தகனத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஊழியர்களை கார்ப்பரேஷன் அதிகாரிகள் அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சியில் உள்ள்ள 15 மண்டலங்களில், 37 இடங்களில் செயல்பட்டு வரும் 41 மயானங்களில் அனைத்து சேவைகளும் இலவசம். 147 சுடுகாடுகள் சென்னை மாநகராட்சியில் உள்ளன. புதன்கிழமை அன்று அனைத்து சுடுகாடுகளிலும் காத்திருக்கும் நிலை ஏதும் உருவாகவில்லை என்று துணை ஆணையர் மேகநாத ரெட்டி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil