Chennai news : தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகின்ற நிலையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தி வந்த பணியாளர்களின் எண்ணிக்கையை 30 முதல் 60% வரை குறைக்க முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று எண்ணிக்கை அடிப்படையில் 15 மாநகராட்சி மண்டலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் 6534 பணியாளர்கள் மட்டுமே இந்த பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 11,879 நபர்கள் பணியாற்றினார்கள்.
இந்த பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் தொற்று இருப்பவர்கள் விவரங்களை சேகரித்து வந்தனர். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை இவர்கள் இனி பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி தற்போது வரை 15 கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் 9 ஸ்கீரினிங் மையங்களின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. கண்காணிப்பு மற்றும் சம்பள செலவுகளை மிச்சப்படுத்த ஒரு பகுதிக்கு ஒரு ஸ்கீரினிங்க் மையமும் ஒரு மண்டலத்திற்கு ஒரு கொரோனா சிகிச்சை மையத்தையும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது. ஆள்குறைப்பு நடவடிக்கை மூலம் ரூ. 7 கோடி வரை மிச்சப்படுத்த இயலும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் மொத்தமாக ஜூன் 30 அன்று கொரோனா தொற்றுக்கு 3307 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதிகபட்சமாக 341 நபர்கள் அடையாறில் சிகிச்சை பெற்று வந்தனர். திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் முறையே 95 மற்றும் 99 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜூன் 29ம் தேதி அன்று 275 புதிய வழக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று குறைவு காரணமாக டெலி கவுன்சிலிங் மையத்தில் பணியாற்றிய 200க்கும் மேற்பட்ட மருத்துவ பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்கள் அந்த பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
நந்தம்பாக்கம், அத்திப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை வணிக மையங்களில் புதிதாக நோயாளிகள் யாரும் சிகிச்சை பெறவில்லை என்ற போதிலும் மூன்றாம் அலையை கவனித்தில் கொண்டு தற்போது அந்த மையங்களை திருப்பி வழங்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil