Chennai one held for dragging pregnant woman on road Tamil News : கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ஜமீன் பல்லாவரம் அருகே கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது சாலையில் இழுத்துச் சென்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் கீதா (24) என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், காலை 7:30 மணியளவில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு விநாயகர் சன்னதிக்குப் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு அருகே இரண்டு ஆண்கள் வண்டியை நிறுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் தாங்கள் சவாரி செய்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி, கீதாவை அணுகி, அவர் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயற்சி செய்கிறார். அந்த நபரைத் தடுக்க முயன்றபோது, கீதாவை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.
கீதா உதவிக்காக சத்தம் போட்ட பிறகு, அக்கம்பக்கத்தினர் அவரை நோக்கி விரைந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தங்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர். பிறகு அருகிலிருந்த கடையில் சிறிது நேரத்திற்கு கீதா அமர்த்தப்பட்டார். மேலும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் அவர் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டதால், முதலுதவிக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கீதாவின் கணவர் ராமச்சந்திரன், வெள்ளிக்கிழமை அன்று பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். “ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் மற்றொருவரைத் தேடுகிறோம். இந்த நபர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்” என்று பல்லாவரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவுதமி கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவரைக் கைது செய்ய சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக மேலும் பல்லாவரம் போலீசார் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil