ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் குற்றங்கள் குறித்து 'முத்துவும் முப்பது திருடர்களும்' என்ற விழிப்புணர்வு புத்தகத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டார். பின்னர், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதையும் படியுங்கள்: ‘சாபம் விட்ட ஜெயலலிதா போயிட்டார்… கேப்டன் சிங்கம் மாதிரி இருக்கிறார்’: பிரேமலதா அதிரடி பேச்சு
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் போலியான வங்கியை நடத்தி வந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரிசர்வ் வங்கியிடமிருந்த வந்த தகவலின்படி, ஒரு வருட காலமாக சென்னை, மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு என 9 இடங்களில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை போலீசார் பிடித்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டாக இந்த வங்கி மூலம் ஏ.டி.எம் கார்டுகள் கொடுக்கப்பட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளராக சேர்க்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். ஆர்.பி.ஐ அனுமதி பெற்றது போல் போலி சான்றிதழ் தயார் செய்து வங்கி நடத்தி வந்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மதுரை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த வங்கி அனுமதியின்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கையால் போலியான வங்கியை நடத்துவது பற்றி தெரிந்தது. போலியான கூட்டுறவு வங்கியை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளோம்.
தனியார் வங்கியின் டெபிட் கார்டை வாங்கி, ஸ்டிக்கர் ஒட்டி, போலியான வங்கியின் டெபிட் கார்டாக கொடுத்துள்ளனர். ரூ.56 லட்சம் பணத்தை முடக்கி உள்ளோம். இது தொடர்பாக இதுவரை 46 பேரை கைது செய்துள்ளோம். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil