Rowdy Encountered By Chennai Police: சென்னை வியாசர்பாடி மேம்பாலம் அருகே பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்த ரவுடி வல்லரசு சென்னை வியாசர்பாடி எம்.என் கார்டன் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது வியாசர்பாடி காவல்நிலையத்தின் முதல்நிலை காவலர் பவுன்ராஜ் சக காவலர்களுடன் சென்று வல்லரசை கைது செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் கூட்டாளிகளுடன் இருந்த வல்லரசு, ஆயுதங்களைக் கொண்டு, பவுன்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே பவுன்ராஜ் சரிந்து விழுந்திருக்கிறார். பின்னர் காவலர் பவுன்ராஜ் மீட்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த எம்.கே.பி நகர் காவல்நிலைய ஆய்வாளர் ஜான் மில்லர் தலைமையில் போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்றனர். அவர்களைக் கண்டதும் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்ற ரவுடிகளைப் பிடிக்க முற்பட்டபோது, ரவுடி வல்லரசு போலீசாரை மீண்டும் தாக்குவதற்கு முயன்றுள்ளான். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் மில்லர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டதில் வல்லரசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான்.
இந்த மோதலின் போது தப்பியோடிய ரவுடிகள் கார்த்தி மற்றும் கதிரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி வல்லரசுவின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
போலீஸா ரவுடியை என்கவுண்டர் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.