மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். நகை கொள்ளையர்களை ராஜஸ்தான் மாநிலம் சென்ற போது நகைக் கொளையர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றின் மேற்கூரையை துளையிட்டு, தங்கம், வெள்ளி என 3.5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம், தினேஷ் சௌத்ரி ஆகியோர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தமிழக காவல் துறையினர் ராஜஸ்தான் விரைந்தனர். கொள்ளையர்கள் குறித்த தகவல்களை ராஜஸ்தான் காவல் துறையினரின் உதவியுடன் தமிழக கவால் துறையினர் சேகரித்து வந்தனர்.
இந்நிலையில், பாலி மாவட்டம் ராம்புரா கிராமத்தில் இன்று அதிகாலையில் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் சென்றபோது கொள்ளையர்கள் தமிழக காவல் துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில், சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, சென்னை இணை ஆணையர் சந்தோஷ் குமார் தலமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளது. அதேசமயம், ராம்புரா கிராமத்தில் பாலி மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெரியபாண்டி கொள்ளை கும்பல், ரவுடிகளை பிடிப்பது என துப்பறிவதில் கைதேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் கேதாராம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெரியபாண்டியன் வீட்டிற்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் சொன்னார்.