சென்னையில் இருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு புறப்பட்ட சரக்கு கப்பல் காலி கண்டெய்னர்களுடன் புதுச்சேரி வந்தது. சரக்கு இறக்கும் வேலை கிடைக்கும் என நினைத்து துறைமுகத்தில் குவிந்த இரு பிரிவு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில்பதற்றமான சூழலால் மீனவர்களை போலீசார் விரட்டியடித்தனர் .
சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடியால் வெளிநாடுகளில் இருந்து வரும் கண்டெய்னர்களை ஏற்றி, இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் புதுச்சேரி துறைமுகத்தில் கண்டெய்னர்களை டெலிவரி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னை, எண்ணூர் துறைமுகத்திலிருந்து 12 டன் எடை கொண்ட 100 கண்டெய்னர்களை கடல் வழியாக நாள்தோறும் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு கொண்டு வந்து இறக்கி டெலிவரி செய்து, இங்கிருந்து கண்டெய்னர்களை ஏற்றி செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக உப்பளம் துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்பட்டு 4 குடோவுன்கள் சுங்க துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லாரிகள் நிறுத்துமிடம், டிரைவர்கள் கழிப்பறை உட்பட பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கண்டெய்னர்கள் ஏற்றும் பணியில் ரிவர்ஸ் சீ வெசல்ஸ் எனப்படும் கார்கோ கப்பல் கடந்த 11ம் தேதி புதுச்சேரி வந்தது. .15 நாட்கள் புதுச்சேரியில் நின்றிருந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு கடந்த 26ம் தேதி புறப்பட்டது. புதுச்சேரியில் 15 நாட்களாக நின்றிருந்த சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்திற்கு புறப்பட்டது.தேங்காய்திட்டு துறைமுகத்தின் முகத்துவாரத்தில் இருந்து மீனவர்களின் மோட்டார் படகு மூலம் கடலுக்குள் செலுத்தப்பட்டது.
சென்னை துறைமுகம் சென்ற இந்த கப்பல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு புறப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு 50 காலி கண்டெய்னர்களுடன் வந்தது.அதில் சரக்கு இருப்பதாக நினைத்து ஏற்றி இறக்கும் வேலை இருக்கும் என நம்பி வம்பாகீரப்பாளையம் மீனவ பஞ்சாயத்தார், வேலை செய்த சுமை தூக்குவோர் சங்கம் என நூற்றுக்கும் மேற்பட்டோர் துறைமுகத்தில் குவிந்தனர்.
கப்பலில் வந்திருக்கும் கண்டெய்னர் லோடு இறக்குவதற்கு ஆட்களை நியமிப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வந்து இருப்பது காலி கண்டெய்னர் தான்.இங்கு எந்த பொருளும் ஏற்றி இறக்க படாது.லாரியில் கண்டெய்னர் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த தொழிற்சாலையிலேயே நிரப்பப்படும் என கப்பலில் இருந்த அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.
இருப்பினும் இரு தரப்பினர்களிடையே வாக்குவாதம் முற்றி மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் இரு தரப்பினரையும் போலீசார் துறைமுக பகுதியில் இருந்து விரட்டி வெளியேற்றினார்கள்.காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் தலைமையில் துறைமுகப் பகுதியில் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.