Chennai Presidency College student commits suicide : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள குருவராஜப்பேட்டை செம்பேடு கிராமத்தில் உள்ள பஜார் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித்தொழிலாளியான இவரின் மகன், குமார் (20) சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “மற்ற மாணவர்கள் போட்ட பிச்சையில் உயிர்வாழ விரும்பவில்லை” என்று கூறி, இரவு 8 மணி அளவில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
திருவள்ளூர் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, துணை கண்காணிப்பாளர் கிரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்த மாணவனுடன் படித்த மாணவர்கள் மற்றும் கல்லூரியில் படித்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவரின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
குமாரை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் யார்? எந்த கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை சிறந்த முடிவாக இருக்காது. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட மாநில உதவி எண் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையத்தை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil