chennai rain today chenai rain today : சென்னை, காஞ்சசிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன.இந்நிலையில், இன்றும் சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது.
சென்னையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் பெரும் வெள்ளசேதம் ஏற்பட காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,780 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று இரவு 8 மணி நிலவரபடி அணையின் நீர்மட்டம் 20.70 அடியாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நிமிடமும் நீர்மட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் புழல் ஏரியில் உள்ளது. பூண்டி, சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சென்னையை சுற்றி உள்ள தாம்பரம், முடிச்சூர், காட்டங்கொளத்தூர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி, அம்பத்தூர் என பல ஊர்களில் இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதிலேயே வானம் இருட்டியது. பகல் இரவு போல மாறியது.
தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.