Janani Nagarajan
Chennai rains : ஞாயிற்றுக் கிழமை பெய்த கனமழையால் பெருங்களத்தூரில் அமைந்துள்ள ஏரிகள் நிரம்ப ஆரம்பித்துள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளது என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. சென்னையில் 20செ.மீ.க்கு மேல் மழைப்பொழிவு பதிவாகியது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்து ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு சென்னையில் கடந்த சில நாட்களில் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2015-ல் வந்த வெள்ளத்தில் பல வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாப்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் பாதுகாப்பாக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
பெருங்களத்தூர், இந்திரா நகரில் வாழும் மக்களிடம் பேசிய போது,"ஒவ்வொரு வருடமும் மழை பெய்தால் எங்கள் தெருவே வெள்ளத்தால் பாதிக்கப்படும். எங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் கல்குட்டை ஏரிகள் நிரம்பி, அதன் உபரி நீர் பெரிய ஏரிக்கு செல்வது இயல்பு. ஆனால், உபரி தண்ணீர் மாயனப் பகுதியை கடந்து எங்கள் தெரு வழியாக செல்வதால் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கிறது. அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றோம். அரசாங்கம் இதை கவனித்து உரிய உதவியை செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினர்.
பெருங்களத்தூரில் இருக்கும் மற்றொரு பகுதியான பாலாஜி நகரில் வாழும் மக்கள் சென்னையின் மழை மற்றும் வெள்ளம் குறித்து பேசிய போது, "நாங்கள் வாழும் இடத்திற்கு அருகில் இரண்டு பெரிய ஏரிகள் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பியது; மேலும் மழை தொடர்ந்தால் பெரிய எரியும் நிரம்பி தெருவிற்கு வரும் அபாயம் உள்ளது. இதனால் நாங்கள் எப்போதும் பாதிப்பை எதிர்நோக்கி தயாராக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறோம். நாங்கள் வாழும் பகுதிக்கு அருகில் மாயனமும், குப்பை கிடங்கும் இடமும் அமைந்துள்ளதால் தண்ணீர் தேக்கத்தில் அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதனால் இங்கு வாழ்க்கை இன்னும் கடினமாக மாறுகிறது" என்று தங்களின் கவலைகளை பதிவு செய்தனர்.
இது மட்டுமல்லாமல், தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் பாதுகாப்பாகவும் தற்காப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதும் நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.