Chennai Rains Tamil Nadu weather today : புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ள நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வடக்கு கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்.
பள்ளிகள் விடுமுறை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்
திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்த வரை பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil