தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையானது கேரளாவில் கடந்த 30-ந் தேதி தொடங்கியது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலவவலாக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கி உள்ளது. மேலும், நேற்று சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்தது. காஞ்சீபுரம், வேலூர் உள்பட பல இடங்களில் சுமார் 1 மணி நேரம் நல்ல மழை பெய்தது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருக்கிறது. எனவே தமிழகம் மற்றம் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் உத்திரமேரூரில் அதிகப்பட்சமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.