சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சாலைப்பணிகளை மேற்கொள்ளும்போது, பழைய சாலைகளை அகழ்ந்து எடுத்துவிட்டு புதிய சாலைகள் அமைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில், பல நாட்கள் புதிய சாலைகள் அமைக்காமல் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பழைய சாலையை அகழ்ந்து எடுத்த மூன்று நாட்களுக்குள், புதிய சாலை அமைக்கப்பட வேண்டும். பழைய சாலை அகழ்ந்து எடுக்கப்பட்ட பிறகு ஐந்து நாட்கள் பின்னரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்காவிட்டால், அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
அந்தவகையில், சாலைகளை அகழ்ந்து எடுத்து 5 நாட்கள் ஆகியும் சாலைகளை சீரமைக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி மொத்தம் ரூ.42.6 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து மறுஆய்வுக் கூட்டத்தின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா கூறுகையில், ஒப்பந்ததாரர்கள் சாலைகளை சரிசெய்யும் பணியின் வேகத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தண்டையார்பேட்டை மற்றும் தேசிக காலனியில் உள்ள பிவி சல்யாணி 8வது தெரு, 18வது தெரு, 23வது தெரு, பெரம்பூர் மெயின் ரோடு, அப்துல் ரஹீம் தெரு, திரு.வி.க.நகர் ஹைதர் கார்டன் 4வது தெரு ஆகிய இடங்களில் சாலைகளை சீரமைக்க தாமதித்த ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினசரி ரூ.5000 வீதம் பணிகள் முடியும் வரை அபராதம் விதிக்கப்படும். இனி வரும் நாட்களிலும் இந்த நடவடிக்கை தொடரும், என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”