சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக பயணிகள் ரயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், செங்கல்பட்டு-தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பெரும்பாலான ரயில்கள் வண்டலூரில் நிறுத்தப்பட்டன.
இந்தச் சிக்னல் கோளாறு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் புறநகர் ரயில்கள் புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக புறப்படுகின்றன அல்லது சென்னைக்கு தாமதமாக வந்து சேர்கின்றன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். திடீர் சிக்னல் கோளாறு குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.