கடந்த வெள்ளிகிழமை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளிக்கிழமை, அதிகாலை 12.15 மணிக்கு கோயில் சன்னிதானத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் இரண்டு உண்டியலை உடைத்த காட்சி, கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியது.
இதில் வேடிக்கையாக, மர்ம நபர் உண்டியலைத் திறப்பதற்கு முன்பாக, கோயிலின் கருவறையில் பிரார்த்தனை செய்தும், இறைவனுக்கு காணிக்கை செலுத்திய காட்சியும் கேமராவில் பதிவாகின. கோயிலுக்குள் நுழைந்து உண்டியல் திருடிய மர்ம நபர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை வழக்கம் போல் கோயிலை திறந்த அர்ச்சகர், கோயிலின் கருவறைக்கு முன்னால் இருந்த இரண்டு உண்டியல் களவாடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருவான்மியூர் காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளைத் தொடங்கினர். கைரேகை நிபுணர்கள் உண்டியலில் கிடைத்த தடயங்களை விசாரித்து வருகின்றனர். சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய சிறப்பு காவல் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
"மர்ம ஆசாமி கோயிலுக்குள் எப்படி நுழைந்தார் என்பதை சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு நடத்தி வருகிறோம். கோயிலின், ஒரு பகுதியில் விளக்குகள் எரியவில்லை. கோயிலுக்கு மிக அருகில் ஒரு சில அடுக்குமாடி வளாகங்கள் உள்ளன. இதை, அவர் பயன்படுத்தியிருக்கலாம்" என்று ஒரு அதிகாரி கூறினார்.