சென்னை சவுக்கார்ப்பேட்டையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சவுக்கார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்தேறியது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தலில்சந்த் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மனைவியின் பெயர் புஷ்பா பாய். இவர்களுக்கு ஷீத்தல் (40)என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உண்டு. நேற்று இரவு, தலில்சந்த், அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரின் சடலங்களை சென்னை காவல்துறை மீட்டது.
சென்னை காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் , கூடுதல் ஆணையர் (வடக்கு) ஏ.அருண் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அகர்வால், " இது திட்டமிட்ட படுகொலை என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். குற்றம் நடந்த இடத்தில் அனைத்து தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இதற்காக, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது,”என்று கூறினார்.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் மர்மநபர் ஒருவர் பதிவாகியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று மாலை, மகள் பிங்கி தனது தந்தையை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்ததார். நீண்ட நேரமாகியும் பதில் வராததால், பிங்கிக்கு சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக, கணவரை வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு வருமாறு முறையிட்டிருக்கிறார். இரவு, 7 மணியளவில் வீட்டிற்கு வந்த அவர், பிங்கியின் தாய், தந்தை, சகோதரர் 3 பேரும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் என காவல்துறை வட்டராங்கள் தெரிவித்தன.
கருத்து வேறுபாடு காரணமாக,ஷீத்தல் தனது மனைவி மனைவி ஜெபமாலா- வை விட்டு பிரிந்து வாழ்வதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.