தேசிய மக்கள் பதிவேட்டில் (NPR), பெற்றோர்களின் பிறந்த இடங்கள் அவற்றிற்கான ஆவணங்கள் கேட்கப்படாது என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தே்சிய மக்கள் பதிவேடு விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள ஒரு இஸ்லாமியருக்கு கூட பாதிப்பு இருக்காது. தனது தலைமையிலான அதிமுக அரசு, இஸ்லாமியர்களின் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
தேசிய மக்கள் பதிவேட்டில், பெற்றோர்களின் பிறந்த இடம், அதுகுறித்த ஆவணங்கள் உள்ளிட்ட 3 முக்கிய கேள்விகள் கேட்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.
மாநிலத்தின் பலபகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய பெண்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, அரசுக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கவேண்டும்.
தமிழ்நாடு, அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. இங்கு ஜாதி மதம் பேதம் உள்ளிட்டவைகளை கடந்து சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரண் ஆகவே மாநில அரசு உள்ளது. நான் இதை சட்டபையிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்த அரசின் நல்லாட்சியை பொறுக்கமுடியாத சிலர், அரசியல் ஆதாயங்களுக்காக, தவறான தகவல்களை பரப்பிவிட்டு, அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
மக்கள் இதுபோன்ற சக்திகளிடம் சிக்காமல், அவர்கள் பரப்பும் தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல், ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.