சின்னசாமி: அண்ணா தொழிற்சங்க நிதி கையாடல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை நிதியில் கையாடல் செய்தது தொடர்பான வழக்கில் தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளர் சின்னசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோதே அவர் தொழிற்சங்க பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தினகரன் அணியில் ஐக்கியமான சின்னசாமி, தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார்.
இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சிங்காநல்லூர் தொகுதி) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/CG3rJRRbh8
— O Panneerselvam (@OfficeOfOPS) August 13, 2018
இதைத் தொடர்ந்து, சின்னசாமி கைது செய்யப்பட்டதற்கு, டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.ஆர்.சின்னசாமி அவர்களை பொய்வழக்கு புனைந்து கைது செய்த பழனிசாமி அரசுக்கும், காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.