காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளார்கள்.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமி கூட்டியிருந்தார். அதன்படி, இன்று நடைபெற்ற அக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
அதுமட்டுமின்றி, ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடக தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படும். காவிரி ஆணையம் அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என கர்நாடகா அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் இன்று தெரிவித்தார். மேலும், வரவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கர்நாடகாவின் அனைத்து எம்.பி.க்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் குமாரசாமி கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்திற்கு பாதகமான விதிமுறைகளுக்கு எதிராக போராடுவோம் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக எந்த வழக்கும் தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்யும்" என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.