திமுக தலைவர் ஸ்டாலின், தான் முதல்வர் ஆவதாக கண்டு வரும் பகல் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது, "திமுக தலைவர் ஸ்டாலின் எப்பொழுதும் கனவு உலகத்திலேயே வாழ்ந்து வருகிறார். அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில், சபாநாயகரூர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று திமுக ஏன் வழக்கு தொடுக்கிறது ஏன் என்பது புரியவில்லை.
ஒருவேளை, இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பேராசையினால்தானோ என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியான அதிமுக தான் வெற்றி பெறப்போகிறது. திமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்திக்க உள்ளது. வீணாண கற்பனைகளை, ஸ்டாலின் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்.
பிரபு, கலைச்செல்வன் மற்றும் ரத்தின சபாபதி உள்ளிட்ட அருப்தி அதிமுக எம்எல்ஏக்கள், தினகரனுடன் மட்டுமல்ல, திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூட்டு வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதற்காகத்தான், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, ஸ்டாலின் இந்த குதி குதிக்கிறார்.
இம்மூவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதனாலலேயே, கட்சி கொறடாவின் பரிந்துரையின் பேரில், சபாநாயகர் தனபால், விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகிறார், ஆனால், அது எதுவும் அவருக்கு பலனை தரப்போவதில்லை.
பொது இடங்களில் மக்களோடு மக்களாக நடந்து சென்று ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். இதற்குமுன்னர், அவர் இதுபோன்று நடந்துகொண்டதில்லை. தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தினால் தான் ஸ்டாலின் இவ்வாறு நடந்துகொள்கிறார்.
இன்னும் தேர்தலே முழுமையாக நடைபெற்று முடியவில்லை. அதற்குள் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக எண்ணி, முதல்வர் ஆகி விட்டதாக பகல்கனவு கண்டுவருகிறார். அவரின் பகல்கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. அவர் இந்த ஜென்மத்தில் முதல்வர் ஆகப்போவதுமில்லை என்று முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
கரூரில், அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது அவர் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது, இத்தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள செந்தில்பாலாஜி அரசியல்வாதி கிடையாது; அவர் ஒரு அரசியல் வியாபாரி. அதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்த செந்தில்பாலாஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் தினகரன் கட்சியில் இணைந்தார். பின் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது அவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி, தனது தேர்தல் அறிக்கையில், தான் வெற்றி பெற்றால், தொகுதி மக்களுக்கு 3 சென்ட் நிலம் தருவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியும், 2 சென்ட் நிலம் தருவதாக அறிவித்திருந்தார். கடைசிவரை அவரால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலவில்லை.
முன்னாள் முதல்வராலேயே நிறைவேற்ற முடியாத அந்த வாக்குறுதியை, இந்த செந்தில்பாலாஜி நிறைவேற்றிவிடுவாரா? மக்களை நன்றாக செந்தில் பாலாஜி ஏமாற்றி வருகிறார் என முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.