தமிழக அரசியலில் பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 'தர்மயுத்தம் தொடங்கப்போகிறேன்' என்று சொன்ன முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கைக்கோர்த்ததை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகரிடம் கடிதம் அளித்தனர்.
அதன்பின், 19 எம்.எல்.ஏ.க்களும் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். அதிலிருந்து, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் திடீரென வெளிவந்து, முதல்வர் பழனிசாமி அணியில் ஐக்கியமாகி தினகரனுக்கு அதிர்ச்சி அளித்தார்.
தினகரனும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களை ஒவ்வொருவராக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்து வருகிறார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு, தமிழக காவல்துறையை குடகு விடுதிக்கு அனுப்பி எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை மேற்கொண்டது.
இதையடுத்து பேட்டியளித்த தினகரன், போலீசாரை வைத்துக் கொண்டு தமிழக அரசு எங்கள் எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறது. 20 கோடி ரூபாய் வரை பணம் தர தயாராக இருப்பதாகவும் பேரம் பேசுகிறது. இதற்குமுன்பு கையில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு இப்படி ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டார்கள் என்றார்.
இந்த நிலையில், அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அவசர அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
அதேபோல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.18 பேரும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், 18 எம்.எல்.ஏக்களும் இன்று நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், தலைமை அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலை சந்தித்து தற்போது பேசி வருகிறார்.