அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசின் ஆதரவை திரும்ப பெற்ற எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியில், காவிரி கரையோரம் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த சனிக்கிழமை முதல் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை பதிவெண் கொண்ட வாகனங்களில் தமிழக போலீசார் நேற்று(செவ்வாய்) திடீரென அந்த விடுதிக்கு சென்று, டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து டிடிவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், "தமிழக போலீசார், விடுதியில் உள்ள எங்களது எம்.எல்.ஏ.க்களை மிரட்டியுள்ளனர். அதாவது, 'நீங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க வேண்டும். அதற்காக இருபது கோடி கூட கொடுக்க தயார். இல்லையெனில், உங்கள் மீது வழக்குகள் தொடர்வோம்' என்றெல்லாம் மிரட்டுவதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். இங்கிருந்து காவல்துறையை அனுப்பி எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். இதையடுத்து, எங்களது எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல், நாங்கள் நீதிமன்றத்தை நாடி காவல்துறையினர் மீதும், அதன் அமைச்சராக இருக்கக் கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.
அதுபோல், பழனியப்பன் எம்.எல்.ஏ மீது யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் அவரிடம் இருமுறை நாமக்கல்லில் விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னரும் அவர் விசாரணைக்கு ஆஜரானார். மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்த போது, 'எனக்கு நிறைய வேலை இருக்கிறது. என்னால் வர முடியவில்லை. வேறொரு நாள் வருகிறேன்' என பழனிசாமி கூறியதற்கு சிபிசிஐடி சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இப்போது, 'சம்மன் அனுப்பினோம். அவர் வரவில்லை' என்று கூறி அவரை கைது செய்ய சிபிசிஐடி அலைந்து கொண்டிருக்கிறது.
விடுதியில் இருந்து வெளிவந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் கூட, 'எங்களை யாரும் மிரட்டவில்லை. நானாகத் தான் அங்கு இருந்தேன். இப்போது அங்கிருந்து வந்துவிட்டேன்' என்று கூறினார். ஆனால், 'விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்படுவதால் விசாரணை நடத்துகிறோம்' என்கிற பேரில், தமிழக அரசு காவல்துறையை அனுப்பி, அவர்களே 'எடப்பாடிக்கு ஆதரவு தர வேண்டும்' என எங்கள் எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகிறார்கள்.
அரசாங்கத்தின் இதுபோன்ற அத்துமீறலகளை நாங்கள் முப்பது ஆண்டுகாலமாக பார்த்து வந்திருக்கிறோம். இதுபோன்ற அதிகார திமிரில் மிரட்டியவர்கள் எல்லாம் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் உள்ளார்கள். அதுபோல, எடப்பாடி பழனிசாமி இப்போது காவல்துறையை அனுப்பி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிப் பார்க்கிறார். நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடர்வோம். நிச்சயம் சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுப்போம்.
பழனியப்பன் விடுதியில் இருந்து கிளம்பிவிட்டார். அவர் இப்போது நீதிமன்றத்தை நாடியிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. மீடியாக்களும் இது போன்ற செய்திகளின் உண்மை நிலையை அறிந்து கொண்டு செய்திகளை ஒளிபரப்புங்கள். மீடியா சென்சேஷனுக்காக இதை பெரிதுப்படுத்தாதீர்கள்.
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திலும் எங்களது ஸ்லீப்பர் செல்கள் சென்றார்கள். தக்க சமயத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது அவர்கள் வெளியே வருவார்கள். என்னிடம் 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.