வெள்ளக்காடான சென்னை… களத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வரும் தனது காரில் வராமல், மகேந்திரா ஜீப்பில் வந்து எழும்பூர், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார்.
சென்னையில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திநகர் சுரங்கப்பாதைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. அதே போல், முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், திருவொற்றில் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்துவருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இந்நிலையில், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் அமைச்சர் கே என் நெரு, சேகர் பாபு, தலைமை செயலர் இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மழை பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். pic.twitter.com/qgNKhc9Erj
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வரும் தனது காரில் வராமல், மகேந்திரா ஜீப்பில் வந்து எழும்பூர், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.
இதற்கிடையில், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil