Advertisment

ஆளுனரிடம் எதிர்பார்ப்பது போஸ்ட் மேன் வேலையை மட்டுமே: தி.க நிகழ்வில் ஸ்டாலின் பேச்சு

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசிக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் நிறைவு கூட்டத்தில், பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் 'போஸ்ட் மேன்' வேலையை மட்டுமே என்று விமர்சித்துப் பேசினார்.

author-image
WebDesk
New Update
CM MK Stalin, Governor RN Ravi, Governor only do postman job on NEET bill, ஆளுநரிடம் எதிர்பார்ப்பது போஸ்ட் மேன் வேலையை மட்டுமே, திக நிகழ்வில் ஸ்டாலின் பேச்சு, CM MK Stalin says, Stalin expect at Governor only do postman job on NEET bill

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசிக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநரிடம் எதிர்பார்ப்பது சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் 'போஸ்ட் மேன்' வேலையை மட்டுமே என்று விமர்சித்துப் பேசினார்.

Advertisment

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசிக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நடைபெற்றது. இந்த பரப்புரை பயணம் நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டதுபோல நான் பெரியார் திடலுக்கு வந்திருப்பது புதிதல்ல. என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும், நமது பாசமிகு ஆசிரியர் அவர்களை பாராட்ட வந்திருக்கிறேன். பாராட்டுவது என்பது ஒரு இயக்கத்தினுடைய தலைவரை, ஒரு கருத்தியலின் தலைவரை பாராட்டுவதாகும். திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக களங்கரை விளக்கமாக நான் அவரைப் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் நான் அவரைப் பார்க்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, நான் கைது செய்யப்பட்டு என்னை சென்னை மத்திய சிறையில் அடைக்கிற நேரத்தில், இரவு 12-1 மணி அளவிலே வெளிச்சம் கிடையாது. இருட்டறையிலே என்னை கொண்டு போய் தள்ளுகிறார்கள். அப்போது தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியரின் கால் தடுக்கி நான் விழ இருந்தேன். அந்த நேரத்தில் என்னைத் தாங்கிப் பிடித்து நிலை நிறுத்தினார். நான் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டபோது அங்கே உள்ளே இருந்த காவலர்களால் நான் தாக்கப்பட்ட செய்தி எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி தாக்கப்பட்ட நேரத்தில் எனக்கு பாதுகாப்பாக இருந்தவர் அண்ணன் சிட்டி பாபு அவர்கள். அப்படி என்னைத் தாக்கப்பட்ட நேரத்தில், என்னைத் தட்டிகொடுத்து தடவிக் கொடுத்து, தைரியமாக இரு நான் இருக்கிறேன் என்று சொன்னவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அவருடைய 89 வயதில் அவர் ஏற்றுக்கொண்ட கொள்கையும் தந்தை பெரியாரும்தான் உள்ளே இருந்து இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். நாகர்கோவில் முதல் சென்னை வரை மாபெரும் பரப்புரை பயணத்தை நடத்தி முடித்திருக்கிறார். இன்னும் பயணத்தை தொடர்வேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர் கி. வீரமணி பயணத்தை நடத்துகிறார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ ஒன்றுமில்லை. தந்தை பெரியார் 90 வயதுக்கு பிறகுதான், அதிகமான கூட்டங்களில் பேசியிருக்கிறார். உலகில் இப்படி ஒரு தலைவர் எந்த இனத்திற்கும் கிடைத்ததில்லை. எந்த இயக்கத்திற்கும் இருந்ததில்லை. அதே போலத்தான், 89 வயதில் நம்முடைய ஆசிரியர் அவர்கள், இந்த இனத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். வருகிற டிசம்பர் 2ம் தேதி அவருக்கு பிறந்தநால். 90வது வயதை அவர் தொடுகிறார்.

ஆசிரியர் கி.வீரமணி விடுதலை இதழுக்கு ஆசிரியராக வந்து 60 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இவையெல்லாம் யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள். தந்தை பெரியார், கலைஞர் அவர்களின் வரிசையில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இந்த நெடிய பயணத்தை நம்மோடு அவர் முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார். அத்தகைய சிறப்புக்குரிய தலைவரை திமுக தலைவர் என்ற முறையில் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

இன உணர்வோடு இளைஞர்கள் திரள வேண்டிய காலம் இது. ஆசிரியர் அவர்களுக்கு நான் அளிக்கும் உறுதி மொழி என்பது, இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்திருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும், எந்த சமரசத்திற்கு இடமளிக்காமல் திராவிட பேரியக்கத்தின் கொள்கை வழி நின்று நான் வழி நடத்திச் செல்வேன் என்பதுதான்.

பெரியார் ஒரு முறை சொன்னார், எனக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்று பெரியார் ஒருமுறை சொன்னபோது, உடனே அண்ணா அதற்கு பதில் சொன்னார். உலகத்திலே எந்த சீர்திருத்தவாதியும் தனது கொள்கை ஆட்சியிலே ஏறி நடைமுறைக்கு வருவதைப் பார்த்ததில்லை. பெரியார் அவர்களே நீங்கள் அதையும் பார்த்துவிட்டீர்கள். அறிஞர் அண்ணா பெரியாரிடம் திருப்பிக் கேட்டார். அதே போல, திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் போராளிகளான நான் உங்களிடத்தில் சொல்வது, உங்களது உழைப்பு வீண் போகவில்லை என்பதின் அடையாளமாகத்தான். இப்போது நீங்கள் பார்க்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சி.

நீங்கள் தேர்தல் அரசியலுக்கு வரப்போகிறவர்கள் இல்லை. பட்டம் பதவிகளுக்காக காத்திருக்கக்கூடியவர் அல்லர். அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள் அல்ல. ஆனால், அதிகாரத்திற்கு வராமலேயே இனம் மானம் காக்கக்கூடிய கருத்தியல் வெற்றி பெறுவதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இதைவிட என்ன வேண்டும்.

இந்த திராவிட மாடல் ஆட்சியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக இது அமைந்திருக்கும். நம்முடைய சமூக நீதியை, நாம் பேசிய மாநில சுயாட்சியை, இன்றைக்கு வட மாநிலத்திலே இருக்கக்கூடிய பல்வேறு தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்திருக்கக்கூடிய முதல்வர்கள், விழிப்படைந்து வரும் வட மாநில பொதுமக்களும் முழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய சாதனை.

திராவிட சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசபாக இருக்கிறது. திராவிட மாடல் என்று அடிக்கடி சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. பெரியார் பெயரை அடிக்கடி சொல்வதைப் பார்த்து அவர்களுக்கு கோபம் வருகிறது. வெறுப்பை சுமந்து வாழ்பவர்களுக்கு திமுகவும் திகவும் ஒட்டியிருப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது. கருப்பையும் சிவப்பையும் யாராலும் எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது. திமுக கொடியிலும், திக கொடியிலும், மதிமுக கொடியிலும் இருப்பத் கருப்பும் சிவப்பும்தான். எங்களை ஒன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது. ஒன்று கலந்துவிட்டவர்கள்தான் என்று சொல்ல வேண்டும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரையும் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நாம், தனித்தனி இயக்கமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு கொள்கையைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள். அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.

தமிழினத்தை கல்வியிலே, தொழில் முன்னேற்றத்திலே, வேலை வாய்ப்பிலே, சமூக மேம்பாட்டிலே வளர்த்தெடுத்து, அது ஒன்றே இலக்காகக் கொண்டு நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் நம்மை எதிர்க்கிறார்கள். இது பல்லாயிரம் ஆண்டு கால பகைமையாக இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சமத்துவத்தை அடையும்வரை நம்முடைய கொள்கையிலே நாம் வெல்லும் வரையில் உறுதியாக இருப்போம்.

100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சி போட்ட விதைதான், சமூக நீதியின் விதை, கல்வி நுழைவு உரிமை, தீண்டாமை விலக்கு, பெண்ணுரிமை, இவற்றின் மூலமாகத்தான் தமிழினமும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்து நிற்கிறது.

நீதிக்கட்சி போட்ட விதையை, பெருந்தலைவர் காமராஜர் அதை வளர்த்தெடுத்தார். பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் அதை செழிக்க வைத்தார்கள். தமிழினம் உயர்வு பெற்றது. இத்தகைய இன எழுச்சியைத்தான் தடுக்கப் பார்க்கிறார்கள். அனைவரும் படிப்பதற்கு தடைபோடப் பார்க்கிறார்கள். அப்படி தடை எழுப்புவதற்கு தீட்டப்பட்டிருக்கிற சதித் திட்டம்தான் நீட். அப்படி தடை எழுப்புவதற்கு தீட்டப்பட்டிருக்கிற சதித் திட்டம்தான் புதிய கல்விக்கொள்கை. அப்படி தடை எழுப்புவதற்கு தீட்டப்பட்டிருக்கிற சதித் திட்டம்தான் மாநில உரிமைகள் பறிப்பு. இந்த சதித் திட்டங்களின் பின்னணியை விலக்கித்தான். இந்த பிரச்சார பெரும்பயணத்தை நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி மேற்கொண்டார்கள். நீட் மட்டுமல்ல எந்த வித வடிவ நுழைவுத் தேர்வும் கூடாது என்று சொல்பவர்கள் நாம். நுழைவுத் தேர்வு முறைக்கு 2006 ஆம் ஆண்டு நம்முடைய கலைஞர் முற்றுப்புள்ளி வைத்தார்கள். நீட் தேர்வு முறையை 2013 ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் நிராகரித்த நீட் தேர்வை முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற வரை தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைய முடியவில்லை. அம்மையார் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரைகூட நுழைய விடவில்லை. ஆனால், இருண்ட கால ஆட்சியைக் கொடுத்த, கெடுத்த, இரட்டையர்களின் ஆட்சிக் காலத்திலேதான் நீட் தேர்வு நுழைந்தது. மாநில உரிமைகளை எல்லாம் அடகு வைத்தார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திமுகவும் ஆதரித்து, சட்டமன்றத்தில் சட்ட முன் வடிவை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் அதை ஆதரித்தது. கட்சி பாகுபாடு இல்லாமல் ஒருமித்த கருத்தோடு ஒற்றுமை உணர்வோடு அதை எல்லாக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஆதரித்து நிறைவேற்றி அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறுவதற்காக சட்ட முன் வடிவை அனுப்பி வைத்தோம். அந்த சட்ட முன் வடிவை திரும்ப அனுப்பப்பட்டதைக்கூட ஏறக்குறைய 2 வருடம் மறைத்து, சுயநலத்துகாக தமிழக நலனுக்காக துரோகம் இழைத்தவர்கள்தான் இந்த இரட்டையர்கள்.

கலைஞர் வழித்தடத்தில் நாம் தொடர்ந்து நீட்டை எதிர்த்து வருகிறோம். திமுக அரசு அமைந்த முதல் ஆளுநர் உரையிலேயே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை நாம் பதிவு செய்தோம். நான் முதலமைச்சராகி நான் டெல்லிக்கு போன முதல் பயணத்தில், பிரதமரிடம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நான் அழுத்தம் கொடுத்தேன். வலியுறுத்தினேன். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், ஜூன் 10, 2021 அன்று, நீதியரசர் ஏகே ராஜன் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்குழு அமைத்தோம். ஒரு லட்சம் பேரிடம் இந்த குழு கருத்தைப் பெற்றது. 165 பக்க அறிக்கையை இந்த குழு 14.7.2021 அன்று அரசிடம் ஒப்படைத்தது.

செப்டம்பர் 13ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்திலே நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஒரு மனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். நீட் தேர்வுக்கு எதிராக ஆந்திரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கோவா, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா மேற்கு வங்கம், ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு அக்டோபர் 10ம் தேதி 2021-இல் நானே கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

நீட் விலக்கு சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள் என்று நவம்பர் 25ம் தேதி நான் ஆளுநரை சந்தித்து கேட்டுக்கொண்டேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். குடியரசுத் தலைவர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டது. உள்துறை அமைச்சரை சந்தித்து நேரடியாக விவாதித்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். கணொலி மூலம் ஜனவரி 12ம் தேதி பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலும் நான் அப்போதும் அதைக் குறித்து வலியுறுத்தி பேசினேன். பிப்ரவரி 1ம் தேதி அந்த சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். பிப்ரவரி 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை மீண்டும் நடத்தி பிப்ரவரி 7ம் தேதி சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி சட்ட முன் வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

அதற்கு பிறகு, மார்ச் 15ம் தேதி மீண்டும் ஆளுநரை போய் சந்தித்து அதை வற்புறுத்திக் குறிப்பிட்டுச் சொன்னேன். அதைத் தொடர்ந்து, மார்ச் 31ம் தேதி பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து இது குறித்து வற்புறுத்திப் பேசியிருக்கிறேன்.

ஆளுநரிடம் நான் கேட்பது, சட்ட முன் வடிவுக்கான ஒப்புதல் அல்ல, ஒப்புதல் வழங்குவதற்கான அதிகாரம் அவரிடத்தில் இல்லை. நாம் கேட்பது இந்த சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள். அதைத்தான், ஆசிரியர் கி.வீரமணி சொன்னார், ஆளுநர் போஸ்ட் மேன் வேலை செய்ய வேண்டும். சட்ட முன் வடிவை அனுப்பி வைக்கக்கூடிய அஞ்சல்துறை பணியைக்கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு அழகல்ல. 8 கோடி மக்களுடைய பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வடிவ மசோதாவை ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பிய சட்ட முன் வடிவ மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுகப்பட்டிருக்கக்கூடிய நாம், மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய திட்டங்களை தீட்டினால், நியமனப் பதவிகளில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களைவிட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நடத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன் பிரதமர் மோடியே குஜராத்தில் முதல்வராக இருந்தபோது ஆளுநர் இப்போது நடந்துகொள்வதைப் போல அப்போது நடந்துகொண்டிருந்தால் இப்போது முட்டுக்கொடுப்பதுபோலத்தான் அப்போதும் முட்டுக்கொடுத்திருப்பாரா? பாஜக ஆளும் மாநிலங்களில் அரசின் செயல்பாடுகளில் ஆளுநர்கள் இப்படி மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கிறார்களா? அப்படி மூக்கை நுழைத்தால் மாநில அரசு முடங்கிவிடும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் என்று நினைக்கிறீர்களா?

இன்று காலையிலே கூட எல்லாரும் குறிப்பிட்டு சொன்னார்கள், பல்கலைக்கழகங்களிலே துணை வேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம், மாநில அரசுக்கு உண்டு என்ற ஒரு சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்திலே தாக்கல் செய்துவிட்டுத்தான் நாங்கள் இந்த கூட்டத்திற்கே வந்திருக்கிறோம். நீட் தேர்விலே நாடகம் நடத்தியது போல, பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்ற உறுதியோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அவர்கள் இன்று மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறார்கள். எதேச்சதிகாரத்தால் சாம்ராஜ்யங்களை கட்டியெழுப்பலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். வரலாறு என்பதெ சாம்ராஜ்யங்கள் சரிந்த கதைதான் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது மக்களாட்சி நடைபெறும் நாடு என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டும். மாநிலங்கள் இணந்ததுதான் ஒன்றிய அரசு என்பதை பாஜகவும் அவர்களின் ஏஜெண்ட்டுகளாக செயல்படக் கூடிய ஆளுநர்களும் உணர வேண்டும். நீட் தேர்வு என்பது மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய அனுமதிக்கும் தேர்வு மட்டுமல்ல, அது மருத்துவக் கல்வியை உயர் வர்க்கத்தினர் கல்வியாக மாற்ற நினைக்கிறபோது, அதை நவீன அறிவியல் தீண்டாமை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் குறிப்பிட்டேன். புதிய கல்விக் கொள்கை என்பது பெரும்பான்மை மக்களை கல்வி நிலையங்களுக்குள் அனுமதிக்க மறுக்கும் கல்விக்கொள்கையாகத்தான் மாறப்போகிறது. ஆனால், அது நிச்சயம் நடக்காது. இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக்கூடாது எனபதெல்லாம், கட்டுக்கதைகள் நம்பி வாழ்ந்த பழமை வாத காலம் அது. ஆனால், அதை இந்த மன்னில் ரத்தமும் சதையுமாக வாழக்கூடிய மக்களின் உள்ளங்களில் சுயமரியாதையும் பகுத்தறிவும் வேரூன்றியுள்ள திராவிட இயக்கத்தினுடைய காலம் இது. இங்கே அந்த கட்டுக்கதைகளுக்கு எல்லாம் இடமில்லை.

எனது லட்சியங்கள் வெற்றிப் பெறுவதற்கு கால தாமதம் ஆகலாம். ஆனால், இறுதி வெற்றி எனக்குத்தான் என்று தந்தை பெரியார் சொன்னார். இத்தனை ஆண்டு காலமாக பழமை வாதத்தை எதிர்த்து நாம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அவர்களின் சூழ்ச்சிகளை மக்கள் துணையோடு முறியடித்துள்ளோம். இதில் இறுதி வெற்றி உறுதியாகச் சொல்கிறேன் நமக்குத்தான். அத்தகைய நம்பிக்கையுடன் நாம் போராடுவோம். நாங்கள் சட்டமன்றத்தில் போராடுகிறோம். ஆசிரியர் கி. வீரமணியும் வைகோவும் மக்கள் மன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Neet Governor Rn Ravi Vaiko K Veeramani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment