எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நாளை (மே 30) மாலை டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தருகிறார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் முதல்வர் ஸ்டாலின், சிறிது நேர ஓய்வுக்கு பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு வேளாங்கண்ணி செல்கிறார். அன்றிரவு வேளாங்கண்ணியில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் மறுநாள் (31-ம் தேதி) நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதோடு ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிகிறார். தஞ்சை மாவட்டத்தில் அம்மாபேட்டை அருகேயுள்ள கொக்கேரி கிராமத்தில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்கிறார்.
அதன் பின்னர், அன்று மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"