தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை புதிய உச்சத்தைத் தொட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால், அதன் விலை பங்குச்சந்தை நிலவரம் போல, மளமளவென ஏறியது. நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகளும், ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் துயரத்துக்கு ஆளாகினர். மேலும் பல வீடுகளில் தக்காளி இல்லாமலேயே சமைத்து வந்தனர். இதுத் தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து, நேற்று தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை சற்று குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. இந்நிலையில், வியாபாரிகள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் தக்காளியை இறக்குமதி செய்தனர். இதனால், தக்காளி விலை மேலும் குறைந்து இன்று கிலோ ரூ.35-க்கு விற்பனையாகிறது. தக்காளி விலை குறைந்ததால் மக்கள் நிம்மதியில் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டிருந்த தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி, தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், தற்போது நிலவும் தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். சிறு-வியாபாரிகள் இணைந்து தக்காளி மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி, தக்காளி விற்பனையை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதிக்கலாம், அதற்கு கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.
மேலும் இதுகுறித்து சிஎம்டிஏ, மார்க்கெட் கமிட்டி ஆகியவை நவ.29-க்குள் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“