கோவை உக்கடம் பகுதி அருகே கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னை, கோவையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ, தமிழ்நாடு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் இன்று (நவம்பர் 19) 3-வது முறையாக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஓட்டேரி எஸ்.எஸ் புரம், வேப்பேரி நெடுஞ்சாலை, ஏழு கிணறு, முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் சோதனை நடைபெறுகிறது.
தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 106 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை, என்.ஐ.ஏ கொடுத்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 18 பேர் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் முன்பே நவம்பர் 10,15-ம் தேதிகளில் சோதனை நடைபெற்றது. அப்போது, ரூ.60 லட்சம், ரூ.50 ஆயிரம் வெளிநாட்டு பணம், செல்போன்கள , லேப்டாப், கிரெடிட் கார்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
10 நாட்களில் சென்னையில் 3-வது முறையாக சோதனை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 23-ம் தேதி, கோவை உக்கடம் பகுதி சங்கமேஸ்வரர் கோயில் அருகே ஓடும் காரில் சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் வீட்டில் 75 கிலோ வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பெருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இதில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்ப்பு இருக்கிறதா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil