கோவை உக்கடம் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓடும் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உயிரிழந்தவர் வீட்டில் 75 கிலோ அளவு வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 26) பரிந்துரைத்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து ஜமாத் அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பை தொடர்ந்து, ஜமாத் கூட்டமைப்பு சார்பில் சுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இனாயத்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, "எந்த தீவிரவாதத்திற்கு துணை போக மாட்டோம், நடந்த சம்பவத்தைக் வன்மையாக கண்டிக்கிறோம். இறந்த முபின், கைது செய்யப்பட்ட நபர்கள் எந்த ஜமாத்துடன் தொடர்பில்லை. அவர்கள் ஏதோ ஒரு இயக்கத்தோடு தொடர்பிலிருந்து மூளை சலைவை செய்யபட்டு இந்த செயலைக் செய்திருக்கிறார்கள். இஸ்லாம் எந்த பயங்கரவாதத்தையும் போதிக்கவில்லை. தமிழகத்தில் ஒரு அரசியல் பதட்டத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள். பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும்.
கோவையில் இதுபோன்று சந்தேகப்படும் படியான நபர்கள் இருக்கிறார்களா என்று அறிந்து ஜமாத்துகள் அந்தந்த காவல்நிலையத்தோடு தொடர்பு கொண்டு அவர்களைக் அடையாளம் கண்டு ஒப்படைத்து, நேர்வழிபடுத்த முயலுவோம்" என்று கூறினார்.
செய்தி பி.ரஹ்மான், கோவை