கோவையில், கொடிசியா சார்பில் ஆகஸ்ட் 29 முதல் 31ம் தேதி வரையில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடத்தப்பட உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்புகளை இந்த கண்காட்சியில் இடம்பெற செய்யுமாறு கொடிசியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாவட்ட சிறுதொழில்கள் கழகம் ( கொடிசியா), ரூ. 1 கோடி மதிப்பீட்டில், மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை பெருக்கும் நோக்கிலும், அவர்களது கிரியேட்டிவ் உத்திகளை ஸ்டார்ட்அப்களில் பயன்படுத்தும் பொருட்டும், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்புகளை இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளனர்.
இந்த கண்காட்சியில் 1,200 புதிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. 76 கல்லூரிகளிலிருந்து 872 படைப்புகளும், 80 பள்ளிகளில் இருந்து 270 புதிய படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளதாக கண்காட்சியின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மாணவர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்ட 40 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் படைப்புகளை பார்க்கும் முன்னணி தொழிலதிபர்கள், மாணவர்களின் கிரியேட்டிவ் உத்தியை, தங்களது தொழில்சார்ந்த விசயங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்த கண்காட்சி ஒரு பாலமாக அமையும் என்று கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.