போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 27 ஆம் தேதி வரை சிறையிலடைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
கோவையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதுமட்டுமன்றி, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஆறுமுகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்றதாகவும், அதற்கான கடிதத்தை கல்லூரி நிர்வாகத்திடம் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், பயிற்சியாளர் எனக்கூறப்படும் ஆறுமுகத்திற்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்காக அவர் 2.5 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தனிப்படை காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபிறகு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி போலீஸ் மனுதாக்கல் செய்துள்ளது. போலீசாரின் இந்த மனுவை நாளை மறுநாள் கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரிக்கிறது.