கோவையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வரும் வழியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisment
கடந்த 23 ஆம் தேதியன்று கோவை கோட்டை மேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு, காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ஜமேசா முபின் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஜமேசா முபினின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவை மாநகரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை காவல் துறையினர் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு வருகை தந்தார்.
அவர் செல்லும் வழியான கோவை - அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சாலையோரத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது வெடிகுண்டு நிபுணர்கள் அக்காரில் சோதனை நடத்தினர்.
அதன்பின்னர் காரின் உரிமையாளர் கண்டறியப்பட்டு அப்பகுதியில் இருந்த கார் அகற்றப்பட்டது. கார் உரிமையாளர் அப்பகுதியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் ஊழியர் என்பதும், காரை நிறுத்தி சென்றதும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
சாலை ஓரம் நின்ற காரில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“